


தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,400 பேருக்கு அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,000 மேலாக அதிகரித்துள்ளது.



சென்னையில் மட்டும் 97,500 கும் அதிகமான பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை செய்த பின்னர் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் பழைய நிலைக்கு தமிழகம் திரும்ப முடியும் என்று கூறினார்.



இதற்கிடையே தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து மருத்துவக் நிபுணர் குழுவுடன் இன்று முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.



அதே போல தற்போது இருக்கும் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு முறை தொடரும் என்றும் ரூ.10,000க்கு மேல் வருவாய் இருக்கும் வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு வழிபட அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.



மேலும், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50% இருக்கைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் என்றும் கடைகள் இனிமேல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.